திருச்சிராப்பள்ளி, பிப்.7- தொழிலாளர்கள், விவசாயிகள் விரோதமான, கார்ப்பரேட் கொள்ளைக்கான ஒன்றிய மோடி அரசின் பட்ஜெட்டை கண்டித்தும். தொழிலாளர் சட்ட திருத்தத் தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும். குறைந்தபட்ச சம்பளம் ரூ.26000 வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் உட்பட அனைத்து விதமான உணவுப் பொருட்கள், அத்திவாசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வியாழனன்று திருச்சி பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்ட செயலாளர் ஜோசப் நெல்சன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்டச் செயலாளர்கள் சிஐடியூ ரெங்கராஜன், ஏஐடியூசி சுரேஷ், ஐஎன்டியூசி வெங்கட் நாராயணன், ஏஜசிசிடியு ஞானதேசிகன், எச்.எம்.எஸ் ஜான்சன், எல்.எல்.எப் தெய்வீகன் ஆகியோர் பேசினர். இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். திருவாரூர் பொதுமக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் நலன்களை புறக்கணிக்கும் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு சிஐடியு, எல்பிஎப், ஏஐடியுசி, ஐஎன்டியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த ஏராளமான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், விவசாயிகளின் விலைப் பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாவட்டத் தலைவர் குணசேகரன், சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா, தொமுச மாவட்ட பொருளாளர் நீலமேகம், ஐஎன்டியுசி மாநில துணைப் பொதுச் செயலாளர் பாண்டியன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் ஒன்றிய அரசின் பட்ஜெட் நகலை கிழித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.