districts

டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வை ஒத்திவைக்க ஜவாஹிருல்லா கோரிக்கை

பாபநாசம், ஜூன் 12-

     டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வை ஒத்தி வைக்க வேண்டுமென மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

    தமிழக உரிமையியல் நீதிமன்றங்களில் சிவில் நீதிபதி பதவிக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  வாயிலாக 2018-ஆம் ஆண்டு 222 பேரும், 2019-ஆம் ஆண்டு 56 பேரும் சிவில் நீதிபதிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர்.  

   அதற்குப் பிறகு நான்கு ஆண்டுகளாக இந்தத் தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது சிவில் நீதிபதி பதவிக்கு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பப் பதிவு, ஜூன்-1 ஆம் தேதி தொடங்கியது.

    ஜூன் 30-ஆம் தேதிக்குள் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். முதல்கட்ட தேர்வு ஆகஸ்ட் 18-ஆம் தேதியும், பிரதான தேர்வு அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது. இதன் மூலம் 245 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாகத் தெரியவருகிறது.

   அரசு சட்டக் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் தற்போது தான் தேர்வுகளை எழுதி முடித்து விட்டு மதிப்பெண் முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தற்போது தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பயின்று தேர்வுகளை எழுதியுள்ள மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத முடியாத சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

    அதே வேளையில் பல தனியார் சட்டக் கல்லூரிகளில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால், அங்கு பயின்றோர் சிவில் நீதிபதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர். இதனால், தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகம் உள்ளிட்ட அரசுக் கல்வி நிறுவனங்களில் படித்தவர்களுக்கு அந்த வாய்ப்புப் பறிபோகும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.  

   தனியார் சட்டக் கல்லூரிகளில் படித்தவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்கு மறுக்கப்படுவது, சமூகநீதிக்கு எதிரானது. இதைக் கருத்தில் கொண்டு டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வை ஒத்தி வைக்க வேண்டும். விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.  

   இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.