தஞ்சாவூர், ஜூன் 25-
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வியாபாரிக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
தஞ்சாவூர் வடக்குவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (65). இவர் சைக்கிளில் தெரு தெருவாக சென்று சேலை வியாபாரம் செய்து வந்தார். இவர் 2021 ஆம் ஆண்டு சேலை விற்பதற்காகச் சென்ற போது, இவரிடம் ஒரு பெண் சேலை வாங்கிக் கொண்டிருந்தார். அந்தப் பெண்ணின் 7 வயது சிறுமி வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். சேலை வாங்கிய அப்பெண் அதை வீட்டுக்குள் எடுத்துச் சென்று பார்த்தார்.
அப்போது வெளியே நின்று கொண்டிருந்த சிறுமிக்கு ராஜா பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், சிறுமி அழுது கொண்டே வீட்டுக்குள் சென்று தனது தாயிடம் கூறினார். இதனிடையே, அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற ராஜாவை அப்பகுதி மக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து ராஜாவை கைது செய்தனர்.
இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி.சுந்தர்ராஜன் விசாரித்து, ராஜாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்தார்.