districts

பொதுமக்களின் 30 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்

திருவாரூர், ஜன.6 - பாலம் கட்டக் கோரிய பொது மக்களின் 30 ஆண்டு கோரிக்கை நிறைவேறியது. பாலம் கட்டுவதற்கான பணி தொடங்கியதை ஒட்டி பொதுமக்கள் தமிழ்நாடு அரசு நன்றி தெரிவித்தனர். திருவாரூர் நகராட்சி, மடப்புரம் பகுதியில் உள்ள 16 ஆவது வார்டு பொதுமக்கள்  பழைய பேருந்து நிலையம், பள்ளி, கல்லூரி, மார்க்கெட், ரயில் நிலையம், மருத்துவமனை ஆகிய இடங்களுக்குச் செல்ல 3 கி.மீட்டர் சுற்றி சென்று வந்தனர்.

இதற்காக இப்பகுதியில் ஒரு நடைபாலம் மட்டும் உள்ளது. இங்கு வாகனங்கள் செல்லும் வகையில் பாலம் கட்டித் தர வேண்டுமென பொது மக்கள் 30 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

 இந்நிலையில், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் பரிந்துரையின்படி நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு ஒப்புதல் பெறப்பட்டு, 36 மீட்டர் நீளம், 6 மீட்டர் அகலத்துடன் பாலம் கட்ட, ரூ. 4 கோடியே 6 லட்சம்  நிதி ஒதுக்கப்பட்டது.  மடப்புரத்திலிருந்து பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் வழி செல்லும் நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் கட்டப்படும் பாலத்திற்கான அளவிடும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. இப்பணியை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.