districts

img

திருச்சி முக்கிய செய்திகள்

விவசாயிகளுக்கு மானிய விலையில் தக்கைப்பூண்டு வழங்கல்

தஞ்சாவூர், ஜூன்.20 -  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி, சேதுபாவா சத்திரம் வட்டார விவசாயிகளுக்கு, தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை சார்பில், முதலமைச்சரின் ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டத்தில் மானிய விலையில் தக்கைப்பூண்டு வழங்கும் விழா பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நா.அசோக்குமார் எம்எல்ஏ தலைமை வகித்தார்.

 பேராவூரணி வட்டார வேளாண் அலுவலர் ராணி பங்கேற்றுப் பேசினார். சேதுபாவாசத்திரம் வட்டாரம் குருவிக்கரம்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) சாந்தி பேசினார்.

நிகழ்வுகளில் திமுக பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், ஊராட்சி மன்றத் தலைவர்கள் வைரவன் (குருவிக்கரம்பை),ராம்பிரசாத் (சொக்கநாதபுரம்), ஒன்றியக்குழு உறுப்பினர் அருள்நம்பி,  விவசாயிகள் கலந்து கொண்டனர்.

பேராவூரணி வட்டாரத்தில் ஜமாபந்தி நிறைவு 
67 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு 

தஞ்சாவூர், ஜூன்.20 -  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வருவாய் வட்டத்தில், வருவாய் தீர்ப்பாயம் பசலி 1433 கடந்த ஜூன் 13ஆம் தேதி தொடங்கியது. ஜூன் 14ஆம் தேதி  குருவிககரம்பை சரக்கத்திற்கும், 18ஆம் தேதி ஆவணம் சரகத்திற்கும், 20ஆம் தேதி பேராவூரணி சரகத்தி ற்கும் கணக்குகள் தணிக்கை நடைபெற்றது.  

பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ தலைமையில் நடைபெற்ற இந்த வருவாய் தீர்வாயத்தில் மொத்தம் 456 மனுக்கள் பெறப்பட்டன. இதில் உடனடி யாக 67 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.  வருவாய்த் துறை அல்லாத பிற துறைகளுக்கான 44 மனுக்கள் அந்தந்த துறைகளுக்கு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 345 மனுக்கள் நிலுவை யில் உள்ளது என கோட்டாட்சியர் தெரிவித்தார்.  இதையடுத்து மாலை குடிகள் மாநாடு நடைபெற்றது.

இதில் வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ கலந்து கொண்டு, 39 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணை, 21 பேருக்கு உட்பிரிவுக்கான ஆணை மற்றும் இதர கோரிக்கைகள் தொ டர்பாக 7 பேருக்கு என அதற்கான ஆணைகளை வழங்கினார்.  

நிகழ்ச்சியில், பேராவூரணி வட்டாட்சியர் தெய்வானை, வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் தரணிகா, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் பாஸ்கர், வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடாசலம், மற்றும் மண்டல துணை வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், பொதுமக்கள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வருவாய் தீர்வாயத்தில்,  கோட்டாட்சியர் ஏற்பாட்டில் பயனாளிகள், பொதுமக்களுக்கு பல்வேறு வகையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. 

பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது

திருச்சிராப்பள்ளி, ஜூன்,20, திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்தின் வளாகத்தில் புதனன்று  ஸ்ரீரங்கம் போச்சம்பட்டி இனாம் புலியூர் பகுதியை சேர்ந்த குமார் ( வயது 35) என்ற நபர் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உறவினரை  பார்ப்பதற்கு வந்தார்.

அப்போது  சட்டென்று அவரது பாக்கெட்டில் இருந்த பணத்தை பறித்த கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆரல்வாய்மொழி மருத்துவர் நகரை சேர்ந்த பார்த்திபன் (வயது 20) என்ற நபரை குமார் கையும் களவுமாக பிடித்தார். உடனடியாக அவரை அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ஒப்படைத்தனர். பின்பு பறிக்கப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து குமாரிடம் காவல்துறை ஒப்படைத்தனர். வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட பார்த்திபனை கைது செய்து அவர் மீது அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

லாட்டரி விற்ற  2 பேர் கைது

திருச்சிராப்பள்ளி, ஜூன் 20- திருச்சி உறையூர் பகுதிகளில் லாட்டரி டிக்கெட் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்  காவல் உதவி ஆய்வாளர் வினோத் தலைமையில் போலீசார்  ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அங்கே நவாப் தோட்டம் நெசவாளர் காலனி இரண்டாவது தெரு பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 65) என்ற முதியவர் நெசவாளர் காலனி பகுதியில் லாட்டரி டிக்கெட் விற்றுக் கொண்டிருந்தார். அவரை பிடித்து அவரிடம் இருந்து லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், பின்னர் அவர் மீது உறையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து,திருச்சி மத்திய  சிறையில் அடைத்தனர்.

இதே போன்று கோட்டை பகுதியில் வள்ளுவர் நகர் மதுரை ரோடு சந்திப்பு அருகே லாட்டரி சீட்டுகள் விற்றதாக முகமது இலியாஸ் என்ற வாலிபரை கோட்டை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.