தஞ்சாவூர், செப்.4 - தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், பூவாணம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி துவக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தியை பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். கால்நடைத்துறை உதவி இயக்குநர் ஜான் சாமுவேல், கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள், கால்நடை வளர்ப்போர் கலந்து கொண்டனர். இந்த கால்நடை மருத்துவ ஊர்தி திங்கள்கிழமை பண்ணவயல், கட்டையங்காடு, செவ்வாய்க்கிழமை திருவத்தேவன், முதுகாடு, புதன்கிழமை பூவாணம், மருதங்காவயல், வியாழக்கிழமை பின்னவாசல், சொர்ணக்காடு, வெள்ளிக்கிழமை அம்மையாண்டி, செங்கமங்கலம், சனிக்கிழமை செருவாவிடுதி, நடுவிக்கோட்டை, நம்பிவயல் ஆகிய கிராமப் பகுதிகளில் காலை 8 முதல் மதியம் 2 மணி வரை மருத்துவ சேவையில் இருக்கும். பிற்பகல் 2 மணிக்குப் பிறகு அவசர மருத்துவ உதவிக்கு பயன்படும். கால்நடை களுக்கான அவசர கால தேவைக்கு 1962 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கால்நடை துறையினர் தெரிவித்துள்ளனர். பேராவூரணி தொகுதியில் மட்டும் சுமார் 1.10 லட்சம் கால்நடைகள் உள்ளன. தற்போது துவக்கி வைக்கப்பட்டுள்ள நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி இப்பகுதி மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக அமையும்.