districts

சவூதியில் முசிறி தொழிலாளி மர்ம சாவு: உடலை மீட்டு வரக் கோரி மனைவி மனு

திருச்சிராப்பள்ளி, செப்.12 - திருச்சி மாவட்டம் முசிறி சித்தாம்பூர் காவேரிபாளையம் குடித்தெரு பகுதியைச் சேர்ந்தவர் புரவியான் (48). இவர் கடந்த சில ஆண்டுகளாக அரபு நாடுகளில் வெல்டிங் வேலை செய்து வந்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சவூதிஅரேபியா சென்ற அவர், அங்குள்ள உள்ள ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி அவர் வேலை பார்த்த கம்பெனியிலிருந்து ஒரு ஊழியர் புரவியானின் மனைவி அன்னக்கிளிக்கு தொடர்பு கொண்டு, உங்களது கணவர் மாயமாகிவிட்டதாக தெரிவித்தார். பின்னர் ஞாயிறன்று காலை உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர். பின்னர் நள்ளிரவில் புரவியான் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து திங்களன்று இறந்த தொழிலாளியின் மனைவி அன்னக்கிளி, மகள் நிவேதாவுடன் ஆட்சியர் பிரதீப் குமாரை சந்தித்து, கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில், “என் கணவர் சாவில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.  கணவர் உடலை மீட்டுத் தந்து எங்கள் வாழ்வாதாரத்துக்கு வழி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

;