திருச்சிராப்பள்ளி, மே 20 - தமிழக முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் மூலம் பாசன ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களை தூர் வாருவதற்கு திருச்சி மாவட்டத்திற்கு ரூ.18.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் 90 பணிகள் 232.59 கி.மீ நீளத்திற்கு நடைபெற்று வருகின்றன. திருச்சி மாவட்டத்தில் உய்யக்கொண்டான் கால்வாய், குடமுருட்டி ஆறு, கொடிங்கால், நந்தியாறு, பங்குனி வாய்க்கால், சோழகம்பட்டி வாரி, ஆனந்தகாவேரி, கோரையாறு, அரியாறு போன்ற மிக முக்கியமான வாய்க்கால் மற்றும் மழை வடிநீர் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கண்காணிப்பு அலுவலர் அரியாறு, கோரையாறு, குடமுருட்டி ஆறு மற்றும் கொடிங்கால் வாரி ஆகியவற்றில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அறிவுறுத்தினர். மேலும், இந்த தூர்வாரும் பணிகளை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள உழவர் குழுக்களுடன் பணிகள் பற்றியும், விவசாயிகளின் தேவைகளையும் கேட்டு அறிந்தார். மேற்காணும் பணிகள் நிறைவு பெறும்போது திருச்சி நகரம், லால்குடி, திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், திருச்சி மேற்கு தாலுகாக்கள் முழுமையாக பயன்பெறும். மேலும், திருச்சி மாவட்டம் வெள்ள சேதாரத்திலிருந்து பாதுகாக்கப்படும். இந்த ஆய்வின்போது, திருச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மணிவாசன், ஆட்சியர், சிவராசு, தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.