districts

img

பணியின்போது உயிரிழந்த மின் ஊழியர் குடும்பத்துக்கு இழப்பீடு கோரி ஆர்ப்பாட்டம்

அரியலூர், மார்ச் 8-  ஜெயங்கொண்டம் அருகே, பணியின் போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ராஜராம் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக் கோரி, அரியலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன், மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டம், எசனை கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு மகன் ராஜாராம்(28). ஜெயங்கொண்டம் மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணிப் புரிந்து வந்த இவர், வியாழக்கிழமை அர்த்தனேரி கிராமத்தில் மின் கம்பத்தின் மீது ஏறி பராமரிப்பு பணி செய்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இந்நிலையில், அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்கள் (கேங்மேன்) சங்க மண்டல செயலர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் கலந்து கொண்டனர்.