திருவாருர், டிச.6 - ஒன்றிய திறனூக்கச் செயலகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 50 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்த ஆற்றல் மன்றத்தை துவக்கின. மின் சிக்கன வார விழாவினை முன்னிட்டு, ஒவ்வொரு பள்ளிகளிலும் மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்த கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளை நடத்தின. இவ்விரு போட்டிகளிலும் தலா 6 மாணவர்கள் வெற்றி பெற்றனர். வென்ற மாணவர்களுக்கு திருவாரூர் கஸ்தூரிபா காந்தி மெட்ரிக் பள்ளியில், பரிசளிப்பு விழா நடைபெற்றது. திருவாரூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பி.சுரேஷ்குமார் தலைமை வகித்து உரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் எம்.எஸ்.ஸ்டீபன்நாதன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்திப் பேசினார். மின் பகிர்மான வட்டத்தின் செயற்பொறியாளர் (பொது) டி.காளிதாஸ், செயற்பொறியாளர் இயக்கம் மற்றும் பராமரித்தல் எஸ்.செந்தமிழ்ச்செல்வி, நல்லாசிரியர் ஆர்.சந்திரா மற்றும் மாவட்டத்திலிருந்து 50 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.சங்கரலிங்கம் வரவேற்றார். ஆற்றல் மன்ற மாவட்ட கருத்தாளர் வி.விஜயன் நன்றி கூறினார்.