அரியலூர், ஜன.3 - அரியலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலைமையில் அளித்த மனுவில், திருமானூர் ஒன்றியம், ஏலாக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், செங்கராயன் கட்டளை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், வாண்டராயன் கட்டளை அரசன், சேரி செட்டிகுளம் ஆகிய கிராமங்களில் விளையும் நெல் மணிகளை 10 கிலோமீட்டர் எடுத்துச் சென்று நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால் தங்களுக்கு நேரம், ஏராளமான பொருள் செலவு ஏற்படுகிறது. பல நாட்கள் காத்து இருந்தாலும் நேரடி கொள்முதல் நிலையங்கள் எந்த ஊரில் அமைக்கப்பட்டுள்ளதோ அப்பகுதியில் விளையும் நெல் மணிகளை முதலில் கொள்முதல் செய்த பின்னர்தான் அடுத்த ஊர்களிலிருந்து வரும் மூட்டைகளை கொள்முதல் செய்கின்றனர். இதனால் பல நாட்கள், மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே செங்கராயன் கட்டளை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகளை காக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் அளித்த புகார் மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.