districts

img

ஒரத்தநாடு டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

தஞ்சாவூர், ஜூலை 18 -

    அமைதியாக போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி உள்ளிட்டோரை காவல்துறையினர் அராஜகமான முறையில் கைது செய்ததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  

    ஜனநாயக ரீதியில் போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி உள்ளிட்ட தலைவர்களை அராஜகமான முறையில், கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம்.  

    வட்டாட்சியர் மற்றும் காவல்துறை, டாஸ்மாக் அதிகாரிகள், கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த பொழுதே, ஒரத்தநாடு டிஎஸ்பி போராட்டத்தை மதிக்காமல், ஜனநாயக ரீதியில் நடக்கிற போராட்டத்தை ஒடுக்கும் நோக்கத்தோடு திடீரென்று உங்களை கைது செய்கிறோம் என்று அறிவித்தார்.

     பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது, கைது செய்தது அராஜகம் என்று கூறி காவல் துறையை கண்டித்து கடைக்கு முன்பாக அமர்ந்து போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தனர். ஆனால் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோ.நீலமேகம் மற்றும் தலைவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.

    காவல்துறையின் இச்செயல் மிக மோசமானது. ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிற போது, அதை சீர்குலைக்கக் கூடிய வகையில் காவல்துறை டிஎஸ்பி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மோசமாக நடந்து கொண்டதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    ஒரத்தநாடு டிஎஸ்பி மீது காவல்துறை நிர்வாகம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். மேலும் கடையை மூடாவிட்டால் மூடுகிற வரை அடுத்த கட்டம் போராட்டம் நடத்தப்படும். எனவே தஞ்சை மாவட்ட நிர்வாகமும் டாஸ்மாக் நிர்வாகமும் உடனடியாக கடையை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

   இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.