பாபநாசம், ஆக.21 -
திருவலஞ்சுழி - பட்டீஸ்வரம் வழித்தடத்தில் புதிய அரசுப் பேருந்து சேவையை பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா துவக்கி வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதியில் கும்பகோணம் அருகே உள்ள எழுமாந்திடல் கிராமத்தைச் சேர்ந்த நரிக்குறவர் குடியிருப்பு மாணவர்கள் உட்பட, திருவலஞ்சுழி, அம்மன்திடல், மணப்படையூர் மற்றும் கோபிநாதப் பெருமாள் கோவில் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டீஸ்வரத்தில் உள்ள அறிஞர் அண்ணா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.
திருவலஞ்சுழி - பட்டீஸ்வரம் ஊர்களுக்கிடையே கடந்த காலங்களில் இயக்கப்பட்டு வந்த மினி பேருந்துகள் தற்சமயம் இயக்கப்படாததால், மாணவர்கள் பள்ளி சென்று வருவதில் பெரும் சிரமங்களை சந்தித்தனர். இதனால், மாணவர்கள் நலன் கருதி திருவலஞ்சுழி - பட்டீஸ்வரம் இடையே அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ.வும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.எச்.ஜவாஹிருல்லா கடந்த ஜுலை மாதம் அரசிடம் கோரிக்கை வைத்தார்.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுப்படி, பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, தடம் எண்.450ஏ பேருந்து மூலம் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து தாராசுரம், திருவலஞ்சுழி, எழுமாந்திடல், பட்டீஸ்வரம், வட்டார போக்குவரத்து அலுவலகம் (கும்பகோணம்), கொற்கை, கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரி வழியாக இயங்கும் புதிய அரசுப் பேருந்து சேவையை திருவலஞ்சுழி ரயில்வே கேட்டில் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தங்களது நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்வர் மற்றும் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு இப்பகுதி நரிக்குறவர் சமூக மக்கள் இனிப்புகள் வழங்கி நன்றி தெரிவித்தனர்.