திருச்சிராப்பள்ளி, செப்,26- திருச்சி புறநகர் மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் ஒக்கரை ஊராட்சியில் 100 நாள் வேலை வேண்டி, மயானத்திற்கு பாதை, மக்களுக்கு குடிநீர், சுகாதார வளாகம், தெரு விளக்கு, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி ஒக்கரை ஊராட்சி மன்ற அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் உப்பிலியபுரம் ஒன்றியம் ஒக்கரை கிளைகள் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கிளைச் செயலாளர் டி.ரமேஷ், எஸ்.குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.போராட்டத்தை விளக்கி ஒன்றிய குழு உறுப்பினர்கள் சி.பிரபாகரன், டி. முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் தளுகை இரா. முத்துக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ் பாண்டியன் ஆகியோர் பேசினர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தினசரி தொடர்ந்து 850 பேருக்கு வேலை வழங்குவது. அடிப்படை சுகாதார உட் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக நிறைவேற்றி தருவது என உறுதி அளிக்கப்பட்டது.இதையடுத்து தற்காலிகமாக காத்திருப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.