districts

img

என்.ஐ.டி. கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: மாதர்-மாணவர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக.31 - திருச்சி என்.ஐ.டி கல்லூரியில் மாணவிகள் விடுதியில் இணையதள கருவியை சரிசெய்ய ஒப்பந்த பணியாளர் (எலக்ட்ரிசியன்) சென்றுள்ளார். அப்போது தனியாக இருந்த ஒரு மாணவி ஒருவருக்கு, அவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதை அறிந்த மாணவர்கள் அவரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.  இதுகுறித்து விடுதிக் காப்பாளரிடம் கேட்டபோது, பெண்கள் யாரும் சரியான முறையில் ஆடை அணிவது கிடையாது. எனவே முதலில் நீங்கள் சரியாக இருங்கள் என்று மாணவிகளை திட்டியுள்ளார். மாணவர்கள் எங்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் என்று கோரி இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.    மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், பெண்கள் விடுதியில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் வெளி ஆட்களை உள்ளே அனுமதித்த காப்பாளரை கைது செய்ய வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பாலியல் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் சார்பில் கல்லூரி முன்பு போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாநில துணைச் செயலாளர் ஜி.கே.மோகன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சரஸ்வதி ஆகியோர் தலைமை வகித்தனர்.  மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஆமோஸ், மாவட்டத் தலைவர் வைரவளவன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் அர்ஜுன், ராஜேஷ், மாதவன் மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.