districts

திருச்சி முக்கிய செய்திகள்

மரக்காவலசையில் ரூ.49.50  லட்சத்தில் சாலை அமைக்கும் பணி  நா.அசோக்குமார்  எம்எல்ஏ  துவக்கி வைத்தார்

தஞ்சாவூர், நவ.3 -  பேராவூரணி அருகே ரூ.49.50 இலட்சத்தில் புதிய சாலை அமைக்கும் பணியை பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக் குமார் துவக்கி வைத்தார்.  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தொகுதிக்குட்பட்ட சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மரக்காவலசை ஊராட்சி யில், முதலமைச்சர் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மரக்காவலசை - துறையூர் அய்யனார் கோவில் சாலை, ரூ. 49 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் தார்ச்சாலையாக அமைக்கப்பட உள்ளது.  இதற்கான பணியை பேராவூரணி எம்எல்ஏ நா. அசோக்குமார் தலைமை வகித்து வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சடையப்பன், கந்தசாமி, ஊராட்சி ஒன்றிய பொறியாளர் மணிமேகலை, திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வை. ரவிச்சந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், ஊராட்சி மன்றத் தலைவர் நிரஞ்சனா சரவணன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சாகுல் ஹமீது, பாமா செந்தில்நாதன்,  ஊராட்சி செயலாளர் நடராஜன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

செந்துறை அருகே கார் மீது பள்ளி வாகனம் மோதி இளைஞர் பலி

அரியலூர், நவ.3 -  அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே கார் மீது பள்ளி வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். செந்துறை அடுத்த பழமலைநாதபுரம், மேற்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் விஜய்(30), அதே பகுதி சின்னப்பிள்ளை கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் செங்கமலம்(45). இவர்கள் வியாழக்கிழமை யன்று துக்க நிகழ்ச்சிக்கு பழமலைநாதபுரம் கிராமத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். குழுமூர் ஆணைவாரி ஓடை பாலம் அருகே சென்ற போது, எதிரே வந்த பள்ளி வாகனம் மோதியதில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் இருந்த விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பள்ளி வாகன ஓட்டுநர் தப்பிஓடினார்.  தகவலறிந்து வந்த செந்துறை காவல் துறையினர், பலத்த காயமடைந்த செங்கமலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இறந்த இளைஞரின் சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். பள்ளிக் குழந்தைகளுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை.

பகுதிநேர ஆசிரியர்கள் பிரச்சனை பேசித் தீர்க்கப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

புதுக்கோட்டை, நவ.3:-   நிதித்துறைச் செயலர் உள்ளிட்டோரைக் கொண்ட குழு நவம்பர் 8-ஆம் தேதி பகுதிநேர ஆசிரியர்களைச் சந்தித்துப் பேசுகிறது என்று மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற் கொண்ட அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது: பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதி லிருந்து ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக பள்ளிகள், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறேன். புதுக்கோட்டையில் வெள்ளிக் கிழமை நடைபெற்றது, 85-ஆவது சட்டப்பேரவைத் தொகுதிக்கான ஆய்வாகும். இவ்வாறு நேரில் பிரச்னைகளைப் பார்த்து தெரிந்து கொள்ளும்போது, மாநில அளவில் நடைபெறும் ஆய்வுக் கூட்டங்களில் அவற்றைப் பேசுவதற்கும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் உதவியாக இருக்கிறது. பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளைத் தந்திருக்கிறோம். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்று வது எனது பொறுப்பு என முதல்வர் ஸ்டாலின் சொல்லி யிருக்கிறார். 10 ஆண்டுகால ஆட்சியில் நிதிநிலை கடுமை யாக பாதிக்கப்பட்டிருக்கிறது. நிதிநிலை சீராகும்போது படிப்படியாக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். பகுதிநேர ஆசிரியர்கள் பிரச்சனையைப் பேசித் தீர்க்க நிதித்துறைச் செயலர் உள்ளிட்டோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு வரும் நவம்பர்  8ஆம் தேதி பகுதிநேர ஆசிரியர்களைச் சந்தித்துப் பேசுகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.