திருச்சிராப்பள்ளி, டிச.21 - திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட நாகமங்கலம் - ஆலம்பட்டி பிரிவு ரோடு பகுதியில் உள்ள நியூ எம்.ஜி.ஆர் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடு இல்லாத ஏழை - எளிய மக்களுக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் 512 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு குடியமர்த்தப்பட்டனர். ஆனால் இவர்களுக்கான அடிப்படை வசதிகளை, எந்த துறையின் மூலம் செய்து தருவது என்பதில் தற்போது போட்டி நிலவுகிறது. குறிப்பாக இந்த பகுதி நாகமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தும், சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் குடிசை மாற்று வாரியத்திடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் சாக்கடை நீர் வெளியே செல்ல வசதி செய்து தர வேண்டும். தேங்கி கிடக்கும் குப்பைகள், நிரம்பி வழியும் செப்டிக் டேங்க்களை சுத்தம் செய்ய வேண்டும். குப்பைகளை அகற்ற வேண்டும். குடிநீர் வசதி செய்து தர வேண்டும், குழந்தைகளுக்கான அங்கன்வாடி, ரேசன் கடை, சமுதாயக்கூடம், விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும். புதர் மண்டி கிடக்கும் பூங்காவை சுத்தப்படுத்தி தர வேண்டும். இங்குள்ள 512 வீடுகளையும் நாகமங்கலம் பஞ்சாயத்தில் இணைக்க வேண்டும். சுடுகாடு அமைத்துத் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை வலியுறுத்தி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நாகமங்கலம் எம்ஜிஆர் நகர் குடிசை மாற்று குடியிருப்பு முன்பு கையில் கருப்புக்கொடி ஏந்தி புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் நாகமங்கலம் ஒன்றிய குழு தலைவர் வடிவேல் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், ஒன்றியச் செயலாளர் தங்கராஜ் ஆகியோர் பேசினர். கிளை செயலாளர் சிவராமன், கருமாரியம்மன் நகர் கிளைச் செயலாளர் அலெக்ஸ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.