“மாம்பழத்தின் சுவைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதிலும் பாதிரி மாம்பழத்தின் சுவையை அனுபவித்தவர்கள் அந்த பழத்தை ஒவ்வொரு சீசனிலும் சுவைத்து மகிழ தவறமாட்டார்கள்.
ஒட்டு, பங்கனப்பள்ளி, அல்போன்சா, நீலம், பாதாமி, தசெரி, கேசர் மல்கோவா, மல்லிகா, ராஸ்புரி, செந்தூரம், கிளிமூக்கு, இமாயத் மாம்பழம் என ஏராளமான மாம்பழ வகைகள் இருந்தாலும் “பாதிரி மாம்பழ”த்திற்கென தனி மவுசு கூடிக்கொண்டே இருக்கிறது.
மற்ற மாம்பழங்கள் காய் பருவத்தில் புளிப்பான சுவையும், செங்காயில் புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையுடன் இருக்கும். ஆனால் பாதிரியோ காய் பருவத்தில் அதீத புளிப்பாய் இருப்பதால் சுவைக்கவே முடியாது. அதே நேரத்தில் பழமான பிறகோ மிக அதிக இனிப்புடன் இருப்பதுதான் அதன் தனி சிறப்பே...!
பிற மாம்பழ வகைகள் பழமான பிறகு தோல் பகுதியின் நிறம் மஞ்சளாகவும், சிவப்பு மஞ்சளாகவும் மாறிவிடும். ஆனால் பாதிரி மாம்பழமோ மேலே பச்சை நிறமாகவும், உள்ளே சிவப்பாகவும் இருக்கிறது. மற்ற மாம்பழங்களின் தோல் சுருங்கினால் பழம் கெட்டு வருகிறது என அர்த்தம். ஆனால் பாதிரி மாம்பழம் சுருங்கினால் இன்னும் கூடுதல் சுவை தருகிறது. நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் பாதிரி பழத்தை ஒரு அறையில் வைத்திருந்தால் வீடு முழுக்க ஒருவித மணம் வீசி அப்பழத்தின் மீதான ஈர்ப்பு கூடுகிறது.
மேலும் பாதிரி மாம்பழத்தின் மீது தேனை தடவி வைத்தால் 6 மாதங்களானாலும் கெட்டுப் போகாமல் இருக்குமாம். இவ்வளவு சிறப்புமிக்க பாதிரி மாம்பழத்தை உலகுக்கு அறிமுகப்ப டுத்தியது மயிலாடு துறைதான் என்பது அப்பழத்திற்கு கூடுதல் சிறப்பு.
மயிலாடு துறையிலும் அதை சுற்றிய பகுதிகளிலும் அதிகமாக விளைவிக்கப்படும் பாதிரி மாம்பழம் அறிமுகப்படு த்தப்பட்டு 176 ஆண்டுகளாகிறது.
பாதிரி மாம்பழம் உருவான வரலாறு மயிலாடு துறை கூறைநாடு பகுதியில் உள்ள தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் இம்மானுவேல் ஆலயத்திற்கு மிஷினரியாக 1847-ல் வந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஓக்ஸ்-ம் அவரது மனைவி சாரல் என்பவரும் அந்த ஆலயத்தை உருவாக்கியதோடு, ஆலயத்தை சுற்றியுள்ள வளாகத்தில் தோட்டங்களை அமைத்து பல்வேறு மரக்கன்றுகளையும், அழகுச் செடிகளையும் நட்டு பராமரித்து வந்தனர். அங்கு ஒட்டுமுறையில் மாங்கன்றை உருவாக்கி வளர்த்த மாமரத்தில் காய்த்த மாம்பழங்கள் அதிக மணம் வீசியதோடு, மற்ற மாம்பழங்களை விட மாறுபட்ட நல்ல சுவையுடன் இருந்துள்ளது.
மேலும் தோளுடன் சாப்பிடும் போதும் சுவையுடன் இருந்துள்ளது. அப்பழங்களை ஆலயத்திற்கு வரும் மக்களிடம் கொடுத்து மகிழ்ந்ததால் பாதிரியார் கொடுத்த மாம்பழம், “பாதிரி மாம்பழம்” என அழைக்கப்பட்டு வருகிறது. பின்னர் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பாதிரி மாமரம் பரவி, மாவட்டம் முழுவதும் இவ்வகை மாமரம் பயிரிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பருவகாலங்களில் அதிகப்படியாக அறுவடை செய்யப்பட்டு, பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் பாதிரி மாம்பழம் பயணம் செய்கிறது.
கிலோ 100 ரூபாய் வரை விற்பனையாகி விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் கைகொடுக்கிற பாதிரி பழங்கள் மற்ற பகுதிகளில் கிடைத்தாலும், மயிலாடுதுறையில் வளர்ந்து காய்த்து கிடைக்கும் பழங்களைத்தான் மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.
மயிலாடுதுறையில் பிறந்த பாதிரி மாம்பழத்திற்கு உரிய அங்கீகாரமாக புவிசார் குறியீடு கிடைக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் எஸ்.துரைராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாம்பழம் அதிகப்படியாக அறுவடையாகி விற்பனை செய்யப்படுவதால் மாம்பழ கூழ் தயாரிக்கும் ஆலையை மயிலாடுதுறையில் நிறுவுவதற்கும் முயற்சி செய்ய வேண்டுமென அவர் கோரிக்கை வைத்துள்ளார். மயிலாடுதுறைக்கென பல அடையாளங்கள் நிரம்பியிருக்கிறது. அதில் “பாதிரி மாம்பழமும்” ஒன்று.
மாம்பழங்களின் ராணி என்றழைக்கப்படுகிற பாதிரி மாம்பழத்தின் சுவையில் மயங்கிய மக்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றுமா?