districts

img

‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்றால் சமையல் எரிவாயு ரூ.500-க்கும், பெட்ரோல் ரூ.75-க்கும் வழங்கப்படும்

திருச்சிராப்பள்ளி, ஏப்.5 - இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால், சமையல் எரிவாயு ரூ.500-க்கும், பெட்ரோல் ரூ.75-க்கும் வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். திமுக கூட்டணி சார்பில் திருச்சி நாடாளு மன்றத் தொகுதியில் மதிமுக வேட்பாளராக போட்டியிடும் துரை.வைகோவை ஆதரித்து,  வியாழனன்று திருச்சி மாவட்டம் திருவானைக் காவல், காட்டூர் ஆகிய இடங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

 அப்போது அவர் பேசியதாவது:

இந்த தேர்தலில் நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கு வைக்கும் வேட்டாக அமையும். கடந்த தேர்தலில் 4 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில், திமுக கூட்டணி வேட்பா ளரை வெற்றி பெறச் செய்து எம்.பி., ஆக்கினீர்கள். வரும் தேர்தலில் துரை வைகோவை 5 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.  அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தால், மாதம் இரண்டு முறை திருச்சி தொகு திக்கு வந்து, உங்கள் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய, உங்கள் எம்.பி., அமைச்ச ருடன் சேர்ந்து நடவடிக்கை எடுப்பேன்.

நாம் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் நமது லட்சியம். அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியாக திருச்சி அமைய வேண்டும்.  ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட மணப்பாறையில் ரூ.200 கோடி மதிப்பில் சிப்காட் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. 6 கோடி ரூபாய் செலவில் காவிரி பாலம் புதுப்பிக்கப் பட்டுள்ளது. அந்தநல்லூர் ஒன்றியத்தில் 3 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் 20 கோடி ரூபாய் செலவில் 42 சாலைகள் புனர மைக்கப்பட்டுள்ளன. 105 கோடி ரூபாய் மதிப் பீட்டில் காவிரி புதிய பாலம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. 11 கோடி ரூபாய் செலவில் ஸ்ரீரங்கம் பேருந்து நிலைய பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.  முதல்வர் கொண்டு வந்த காலை உணவுத் திட்டத்தை, வெளி மாநிலங்கள் மட்டுமின்றி கனடா நாட்டிலும் செயல்படுத்தி உள்ளனர். இதில் தினமும் 68 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறு கின்றனர்.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ஒரு கோடியே 60 லட்சம் பேர் விண்ணப்பித்த னர். அதில் 10 சதவீதம் பேருக்கு உரிமைத் தொகை கிடைக்கவில்லை. உரிமைத் தொகை கிடைக்காத மகளிருக்கு ஐந்து, ஆறு மாதங்க ளில் கிடைக்கும்.  ‘இந்தியா’ கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், சமையல் எரிவாயு 500 ரூபாய்க்கும், பெட்ரோல் 75 ரூபாய்க்கும் வழங்கப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும்.

இந்தியாவில் 10 ஆண்டுகளாக பிரதமராக ஆட்சி செய்தவர், கருப்பு பணத்தை ஒழித்து நாட்டு மக்கள் ஒவ் வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக கூறினார். ஆனால் அதைச்  செய்யவில்லை. பிரதமர் மோடி வாயால் வடை சுட்டு, அவரே சாப்பிட்டு விடுவார். தமிழகத்து க்கு ஒரு திட்டத்தைகூட அவர் செயல்படுத்த வில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.  

கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.