புதுக்கோட்டை, நவ.12 - அரசாணை எண்.56-ஐ பின்பற்றி உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கௌரவ விரிவுரையாளர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி முன்பு நடைபெற்ற நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர் சங்க திருச்சி மண்டலத் தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். புதுக்கோட்டை கிளைத் தலைவர் வீரமணி, செயலாளர் தேவி, பொருளாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் பங்கேற்றனர். கௌரவ விரிவுரையாளர்களை உடனடியாக அரசாணை எண் 56-ஐ பின்பற்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கல்லூரி ஆசிரியர் பணி நியமனத்தில் எழுத்துத் தேர்வு முறையை கைவிட்டு நேர்காணல் முறையை பின் தொடர வேண்டும். கௌரவ விரிவுரையாளர்களை பணியை விட்டு வெளியேற்ற உருவாக்கப்பட்ட அரசாணை எண்.246, 247, 248 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து நாள்தோறும் போராட்டத்தில் ஈடுபட போவதாக அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.