நாகப்பட்டினம், மே 15-
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் மாணலூர் ஊராட்சியில் அடிப்படை வசதி கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடலாக்குடி கிராமத்திற்கு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைத்து தரக்கோரி மாணலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் கேசவன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.சுப்பிரமணியன், கீழ்வேளூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.முத்தையன், வழக்கறிஞர் அம்பேத்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், கடலாக்குடி ஆற்றங்கரை சாலையை தார் சாலையாக மாற்றி தர வேண்டும். ஜீவா நகரில் புதிதாக மின்கம்பம் அமைத்து தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.