தேனி, மே 24-
நரிக்குறவர் மக்களையும், நாடோடிகளையும் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று உணவுவாங்கித் தந்த கேரளாவைச் சேர்ந்த முஸ்லீம் பெரியவரை தாக்கிய உணவக ஊழியர் மீது வழக்கு செய்த தேனி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார் கள். கேரளமாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி யைச் சேர்ந்தவர் சித்திக்(62). இவர் சொந்த வேலை காரணமாக நேற்று முன்தினம் தேனி வந்திருந்தார்.
கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையத்தில் உள்ள தட்டி விலாஸ் ஹோட்டலில் சாப்பிடச் சென்றார். அப்போது வெளியில் நின்றிருந்த நரிக்குறவர்கள் இவரிடம் பிச்சை கேட்டுள்ளனர். ஆனால் சித்திக் பணம் தராமல் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று ஐந்துபேருக்கு உணவு வாங்கித் தந்துள்ளார்.
இதைப்பார்த்ததும் மேலும் 3பேர் வந்தனர். அவர்களுக்கும் உணவு பரிமாறப்பட்டது.இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த யாசகர்களும், நாடோடிகளும் திரண்டு வந்தனர். ஆனால் சித்திக் தன்னிடம் பணம் இல்லை என்று கூறி யுள்ளார். ஆனால் ஹோட்டல் முன்பு நாடோடிகள் வெகு நேரம் கூடி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கடை ஊழியர்களுக்கும், சித்திக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் கடை ஊழியர் கோவிந்தராஜ், சித்திக்கை தாக்கினார். காயம்பட்ட சித்திக் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். புகாரின் பேரில் தேனி காவல் ஆய்வாளர் ஜீவானந்தம் கடை ஊழியர் கோவிந்த ராஜை கைது செய்து சிறையில் அடைத்தார்.