மயிலாடுதுறை, ஜூன் 23-
கல்லணையிலிருந்து வந்த காவிரி நீர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் மேலையூரில் காவிரியின் குறுக்கே அமைந்துள்ள நீரொழுங்கிக்கு புதனன்று மதியம் வந்தடைந்தது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி மகாபாரதி உத்தரவின் பேரில் மயிலாடுதுறை மாவட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் வே.சண்முகம் அறிவுரையின்படி புதனன்று மாலை பாசனத்திற்காக உதவி செயற்பொறியாளர் கி. ஜெயராமன், தண்ணீர் பாசனத்திற்கு திறந்து விடப்பட்டது. உதவி பொறியாளர் சு.சண்முகம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மேலையூர் நீரொழுங்கியிலிருந்து பிரிந்து செல்லும் காவிரி நீர் மூலம் நெய்தவாசல், மேலையூர், சாயாவனம், கீழப்பெரும்பள்ளம், மேலப்பெரும்பள்ளம், தருமகுளம், இராதாநல்லூர் உள்ளிட்ட கிராமங்களிலுள்ள 2 ஆயிரத்து 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன்பெறும் என கூறி விவசாயிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.