திருச்சிராப்பள்ளி, பிப்.8- தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் மணிகண்டம் ஒன்றியம் சார்பில் பணி ஓய்வு பாராட்டு விழா, மாணிக்க ஆண்டு விழா, தொகுப்பூதியம் ஒழிப்பு மற்றும் 16 ஆவது ஒன்றிய கிளை மாநாடு ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை திருச்சி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள எம்.ஆர். அப்பன் இல்லத்தில் நடந்தது. விழாவிற்கு ஒன்றியத் தலைவர் நளினி தலைமை வகித்தார். விழாவை மாவட்டச் செயலாளர் அல்போன்ஸா துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பால்பாண்டி பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்புரை ஆற்றினார். விழாவில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் நவநீதன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் சாந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு காலமுறை ஊதியம் மாற்றி காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். உணவூட்டு செலவினம் ரூ.5 வழங்க வேண்டும். 63 ஆயிரம் காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வு கால பணப்பயன்களை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் புதிய ஒன்றிய தலைவராக சரோஜா, துணை தலைவர்களாக கவிதா, தனம், செயலாளராக பவுலின்மேரி, இணை செயலாளர்களாக சகாயராணி, ஜெயந்தி மரிய ஸ்டெல்லா, பொருளாளராக சந்திரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநில துணைத்தலைவர் பெரியசாமி நிறைவுரையாற்றினார். இணை செயலாளர் சரோஜா நன்றி கூறினார்.