மயிலாடுதுறை, மார்ச் 2- மயிலாடுதுறை அருகேயுள்ள சேந்தங்குடி தனியார் திருமண மண்டபத்தில் 2023-24 ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் தனி நிலை அறிக்கை தொடர்பான மண்டல வாரியான விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டம் வியாழனன்று வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வி மெய்யநாதன் முன்னிலை வகித்தார். வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் சி.சமயமூர்த்தி, மயிலாடு துறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.இராமலிங்கம், மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாண சுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா எம்.முருகன் (பூம்புகார்), எஸ்.ராஜகுமார் (மயி லாடுதுறை), துரைசந்திரசேகரன் (திருவை யாறு) மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரநிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், இயற்கை விவசாயி மாப்படுகை இராமலிங்கம், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் இயற்கை விவசாயிகள் உற்பத்திசெய்கிற விளைப்பொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட அரிசி களை ரேசன் கடைகளில் விற்பனை செய்யவேண்டும். தேங்காய் விவசாயி களை பாதுகாக்கும் விதமாக ரேசன் கடைகள் மூலம் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும், அனைத்து விவசாயிகளுக்கும் மாதம் 6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ் கோரிக்கை விடுத்தார்.