அரியலூர், பிப்.8- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேல வெள்ளாளர் தெருவில் அன்னை மாதா எஜுகேஷனல் டிரஸ்ட்டில் செயல்படும் அமெட் என்ற பெயரில் நர்சிங் கல்லூரி இயங்கி வருகிறது. இதில் 45 மாணவிகள் நர்சிங் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியை செங்குந்தபுரத்தைச் சேர்ந்த சபாபதி மகன் கொளஞ்சி என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இக்கல்லூரியானது தமிழ்நாடு அரசு மருத்துவத் துறை, இந்தியன் நர்சிங் கவுன்சில், மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றிலிருந்து முறைப்படி அங்கீகாரம் பெறாமல், 2 வருட டிப்ளமோ நர்சிங் கோர்ஸ் நடத்தி வருவதாகவும், இதனால் மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் மற்றும் நர்சிங் கவுன்சில் துறைகள் மூலம் புகார் எழுந்தன. இதையடுத்து அரியலூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மாரிமுத்து தலைமையிலான சுகாதாரத்துறை குழுவினர் பிரச்சனைக்குரிய கல்லூரியில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கல்லூரி சார்பில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு சோதனையில் அரசு அங்கீகாரம் பெறாமல் அக்கல்லூரி செயல்பட்டது தெரியவந்தது. ஏற்கனவே 2 முறை இக்கல்லூரியில் சோதனை செய்வதற்கு வந்த போது கல்லூரி மூடப்பட்டு இருந்ததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். 3 ஆவது முறை நடத்திய சோதனையில்தான் போலி நர்சிங் கல்லூரி என தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மாரிமுத்து தெரிவிக்கையில், ஜெயங்கொண்டம் மேல வெள்ளாளர் தெருவில் அன்னை மாதா எஜுகேஷனல் டிரஸ்ட் (அமெட்) என்ற பெயரில் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அங்கீகாரம் இல்லாமல் இக்கல்லூரி செயல்படுவதாக வந்த புகாரின் பேரில் 3 ஆவது முறையாக கல்லூரியில் ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில் அரசு விதிமுறைகள் படி அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டது தெரியவந்தது. மேலும் உரிய ஆவணங்களும் கல்லூரி சார்பில் சமர்ப்பிக்கப்படவில்லை. இதையடுத்து அக்கல்லூரி மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். மேலும் இக்கல்லூரியில் பயின்ற மாணவிகளின் கல்வி குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பயில்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாணவிகள் நர்சிங் கல்வி எடுத்து பயிலும் போது, அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனமா? என்று ஆராய்ந்து சேர வேண்டும். அப்படி பயின்றால் மட்டுமே செவிலியராக சேர்ந்து அரசு வேலை கிடைத்து பயன் பெற முடியும். அரியலூர் பெரம்பலூர் மாவட்டத்தில் இதுபோன்று அரசு அனுமதியின்றி செயல்படும் நர்சிங் கல்லூரி மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆய்வின் போது ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் செந்தில்குமார் மற்றும் மருத்துவ அதிகாரிகள் உடனிருந்தனர்.