districts

img

சிவகாசியில் ரூ.400 கோடியை எட்டியது தினசரி காலண்டர் விற்பனை

சிவகாசி, ஜன.1- சிவகாசியில் 2025ஆம் ஆண்டிற்காக தினசரி காலண்டர் விற்பனை ரூ.400 கோடியை எட்டி சாதனை படைத்தது. விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பல்வேறு விதமான காலண்டர்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. அதில், தினசரி காலண்டர்கள் தயாரிப்பு பணிகள் பிரதானமாக இருந்து வருகிறது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்களும், இதை சார்ந்து 100க்கும் மேற்பட்ட அச்சகங்களும் ஈடுபட்டு வருகின்றன. சிவகாசியைப் பொறுத்தவரை ஒரு ஆண்டில் 6 மாதங்கள் மட்டுமே காலண்டர் அச்சிடும் பணிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும், தமிழ் புத்தாண்டு அன்று பஞ்சாங்கம் வெளியான பின்பே, அடுத்தாண்டிற்கான காலண்டர் தயாரிப்பு பணிகள் தொடங்கிடும். குறிப்பாக ஆகஸ்ட் மாதம் முதல் ஜனவரி வரை காலண்டர் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது முழுமையாக தயார் செய்யப்பட்ட காலண்டர்கள், வெளி மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து காலண்டர் தயாரிப்பாளர் ஒருவர் கூறுகையில், எடுக்கப்பட்ட ஆர்டர்களில்  90 விழுக்காடு அளவிற்கு காலண்டர்கள் தயாரித்து முடிக்கப்பட்டுள்ளன. அவை, தேவைப்படும்  நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு காலண்டர்கள் விற்பனை சுமார் ரூ.400 கோடியை கடந்துள்ளது. கடந்தாண்டை விட விற்பனை சற்று அதிகமாகவே இருந்தது எனவும் தெரிவித்தார்.