புதுக்கோட்டை, ஆக.2 - எல்லா வகையான ஏற்றத் தாழ்வுகளையும் களையும் பொறுப்பு படைப்பாளிகளுக்கு இருக்கிறது என்றார் எழுத்தாளர் அ. வெண்ணிலா. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 7 ஆவது புத்தகத் திருவிழாவின் 6 ஆம் நாளான வியாழக்கிழமை மாலை ‘சமத்துவம் என்னும் கனவு’ என்ற தலைப்பில் எழுத்தாளர் அ.வெண்ணிலா பேசியதாவது: ஆதிகாலம் தொடங்கி இன்றுவரை சமத்துவம் என்ற கருத்தில் பெரிய மாற்றம் வந்துவிட இல்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்பே பாரதி தனது பணியாளருக்கு சமத்துவம் எனப் பெயர் வைத்து, அவரை எல்லோரும் அமர்ந்திருக்கும் பொது இடத்தில் நாற்காலியில் அமரவைக்க படாத பாடுபட்டார். இப்போது வரை நாற்காலி என்பது அதிகாரத்தின் குறியீடாகவே இருக்கிறது. பலருக்கும் நாற்காலியில் அமருவது என்பது கனவாகவே இருக்கிறது. ஆனால், எல்லோரும் சமம் என்றும் எல்லோருக்கும் சமத்துவப் பாதுகாப்பு சட்டரீதியாக இருக்கிறது. நிற, இன, மொழி, பிறப்பு அடிப்படையிலான பேதம் கூடாது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. ஆயினும், இன்றும் சமம் என்ற சொல்லை நாம் யாரும் ஏற்றுக் கொள்ளவே இல்லை. அத்தனை ஏற்றத்தாழ்வுகளுக்கும் காரணமாக நமது மூளை இருக்கிறது. அதுதான் பல நேரங்களில் கடவுளாகவும், பல நேரங்களில் சாத்தானாகவும் இருக்கிறது. எந்த மரமும், எந்த விலங்கும் யாருடனும் ஒப்பிட்டு பேதம் பார்ப்பதில்லை. அவர்களிடமிருந்து ஓர் அறிவு கூடுதலாகப் பெற்ற மனிதர்களிடம்தான், சாதி, மத, இன, பாலின வேறுபாடுகள் இருக்கின்றன. திறமையால் ஒருவரை மதிக்க வேண்டும் என்பதை ஏற்கவே இல்லை. நூற்றாண்டு காலமாக இத்தகைய தேசத்தில் வாழும் இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும்கூட இன்னமும் நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யாதும் ஊரே எனச் சொல்லிய, பிறப்பொக்கும் எனச் சொல்லிய அறிஞர்கள் வாழ்ந்தது தமிழ் மண். ஆனாலும், வேறுபாடுகள் தொடர்கின்றன. இவற்றை சரி செய்ய வேண்டிய பொறுப்பு படைப்பாளிகளுக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர்.ரம்யாதேவி தலைமை வகித்தார். முன்னதாக மு.கீதா வரவேற்றார். சி.ஷோபா நன்றி கூறினார்.