தஞ்சாவூர், ஆக.22-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் குறிஞ்சி இன மக்கள் எழுச்சிக் கழகத்தின் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நிறுவனர் தலைவர் உத்தம குமரன் தலைமையில் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பழங்குடி மக்களுக்கு சாதிச் சான்று, வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். பேராவூரணி அரசுப் பள்ளிகளில் படிக்கும் பெரியகத்திக் கோட்டை கிராம மாணவ, மாணவியர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் கொரட்டூர் வரை நடந்து வந்து, அரசுப் பேருந்தில் ஏறி பேராவூரணி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதற்காக அதிகாலையிலேயே வீட்டில் இருந்து புறப்பட வேண்டியுள்ளது. மாணவர்களின் சிரமத்தை உணர்ந்து காலை, மாலை பள்ளி நேரங்களில் பெரிய கத்திக்கோட்டை வரை பேருந்தை இயக்க போக்கு வரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லியடிக்காடு குண்டன் தெருவில் அரசு பொதுப் பாதையை சிலர் ஆக்கிரமித்து இருப்பதால், நடக்கக் கூட முடியாமல் தெரு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி யுள்ளனர். எனவே, இதுகுறித்து வட்டாட்சியர் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.