சென்னை, ஆக.26-
வரி செலுத்தாத நிறுவனங்களின் சொத்துக்களை ஏலம் விட்டு, ரூ.3.90 கோடி வசூலித்து இருப்பதாக, வணிக வரித்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, வணிக வரி ஆணைய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை வடக்கு கோட்டத்தில், ‘மோனிகா மெட்டல்ஸ்’ என்ற நிறுவனத்தில், 2012 இல் திடீர் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, போலி ரசீதுகள் வாயிலாக, அதிக உள்ளீட்டு வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
பத்து ஆண்டுகளாக வரி பாக்கியை செலுத்தாததால், சவுகார்பேட்டையில் உள்ள நிறுவன சொத்துக்கள் முடக்கப்பட்டு, ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், ஏல நடவடிக்கையை தொடரவும் உத்தரவிட்டது.
பின்பு, ஜூலை 21ல் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. இதன் வாயிலாக, அரசுக்கு வர வேண்டிய, ரூ.3.90 கோடி வரி பாக்கி வசூல் செய்யப் பட்டு, கருவூலத்தில் செலுத்தப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.