districts

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் முதன் முறையாக குடலிறக்க அறுவைச் சிகிச்சை

தஞ்சாவூர், ஜூன் 4-

    தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் முதன் முறையாக குடலிறக்க அறுவைச் சிகிச்சை நடந்தது.  

   அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை ஊராட்சிக்குட்பட்ட பிலால் நகர் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (45). இவர் கடந்த மூன்று மாதங்களாக குடலிறக்கப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் நியூட்டன் ஆலோசனையின்படி உடல் பரிசோதனை செய்து வந்துள்ளார். இருந்தபோதும் குடலிறக்கம் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    இதையடுத்து அப்துல் ரஹீமிடம் குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர் கூறியுள்ளார். பின்னர் தலைமை மருத்துவர் நியூட்டன் தலைமையில் அறுவைச் சிகிச்சை நிபுணர் பிரசன்னா, மயக்க மருந்து நிபுணர் ஹக்கீம், மருத்துவ சேவைகள் இணை இயக்குனர்  திலகம் ஆகியோர் இணைந்து குடல் இறக்க அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்தனர்.  

    அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு தற்போது அப்துல் ரஹீம் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால் குறைந்தது ரூ.40 ஆயிரம் செலவாகும் எனக் கூறப்படுகிறது.  

   இந்த நிலையில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தினால் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.