districts

img

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கம் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மயிலாடுதுறை,  மார்ச் 13 - மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர், மாமாக்குடி சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை விரைவில் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், ஆறுபாதி, திருக்கடையூர், மாமாகுடி, மேமாத்தூர் உள்ளிட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளால் அறுவடை செய்துகொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகள் கடந்த பல நாட்களாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.  இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.சிம்சன் கூறுகையில், சம்பா நெல் சாகுபடி செய்து அறுவடை நேரத்தில் பலத்த கனமழையால் நெல் பயிர்கள் சேதமடைந்து மகசூல் பாதிக்கப்பட்டது. இதில் ஓரளவு காப்பாற்றப்பட்ட நெற்பயிர்களை அறுவடை செய்து கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றால், ஏற்கனவே கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் நிரம்பி உள்ளன.  கடந்த பத்து நாட்களாக கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை எடுக்க லாரிகள் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திற்கும் வருவது இல்லை. அப்படியே வந்தாலும் ஓரிரு லாரிகள்தான் வருகிறது. நெல் மூட்டைகள் எடுத்துச் செல்லப்படாமல் உள்ளதற்கு லாரிகள் தட்டுப்பாடு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இதனால் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் 5 ஆயிரத்திலிருந்து, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.  இதனால் நெல் மூட்டைகள் தேக்கம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் கொண்டு வந்துள்ள மூட்டைகளை உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களில் விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனை செய்து வாங்கிய கடனை அடைக்கலாம் என்று எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்தில் இருந்து எடுத்துச் செல்ல வேண்டுமென விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது என்றார்.

;