அறந்தாங்கி, ஜூன் 20-
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே துரையரசபுரத்தில் உள்ள கூட்டுறவு நூற்பாலையில் கைத்தறி மற்றும் துணிநூல்த்துறை அமைச்சர் காந்தி திங்களன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் பஞ்சுகளின் தரம்,நூல் மற்றும் ஆலையின் உட்கட்டமைப்பு குறித்து ஆய்வு மேற் கொண்டார்.
அதனை தொடர்ந்து ஆலை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். அப்போது தொழிலாளர்கள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கையில், மூன்று சிப்ட்களாக நடை பெற்று வந்த வேலை தற்போது 2 சிப்ட்களாக மாற்றப் பட்டுள்ளது, இதனை பழைய முறைப்படி மாற்ற வேண்டும். 2013ம் ஆண்டு முதல் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது. அதனை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அமைச்சர் உடனடியாக இதற்கான தீர்வு காணப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.