districts

img

குமரியில் குளிர்சாதன வசதியுடன் படகு சவாரி

நாகர்கோவில், மே 24-  

     கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இரண்டு அதிநவீன படகு சவா ரியை பொதுப்பணிகள், நெடுஞ் சாலைகள் மற்றும் சிறுதுறை முகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து தளத்தில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சிக்கு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமை வகித்தார் மாவட்ட ஆட்சி யர் பி.என்.ஸ்ரீதர், மேயர் .ரெ.மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலக சுற்றுலா தலமான கன்னி யாகுமரியில் கடல் நடுவில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டப மும் அதன் அருகில்  திருவள்ளு வர் சிலையும் உள்ளன.  

    தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பய ணிகள் படகில் சென்று இவற்றை பார்த்து வருகிறார்கள். இதற்கு தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. மேலும் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை குளிர்சாதன வசதியுடன் உல்லாச படகு சவாரி செய்ய சுமார் ரூ.8.24 கோடி மதிப்பில் திருவள்ளுவர், தாமிரபரணி என்ற பெயர் கொண்ட சுற்றுலா சொகுசு படகு வடிவமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரபட்டுள்ளது.  

    தாமிர பரணி நவீன சொகுசு படகில் குளிர்சாதன வசதியுடன் 75 சுற்றுலா பயணிகள் அமரும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருவள்ளுவர் நவீன சொகுசு படகில் குளிர்சாதன வசதியுடன் 19 சுற்றுலா பயணிகள் அமரும் வகையிலும், 131 பயணிகள் சாதா ரண இருக்கைகளுடன் பயணம் செய்வதற்கும் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. இவ்விரு நவீன சொகுசு படகு களின் மொத்த மதிப்பு ரூ.8.24 கோடி ஆகும்.

   குளிர்சாதன இருக்கை யில் பயணம் மேற்கொள்ளும் ஒரு நபருக்கு ரூ.450, சாதாரண இருக்கையில் அமர்ந்து பயணம் மேற்கொள்ளும் ஒரு நபருக்கு ரூ.350 கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இவ்விரண்டு படகுக ளும் பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழக தளத்தில் இருந்து புறப்பட்டு, சின்ன முட்டம் வழியாக வட்டக்கோட்டை கடல் பகுதியை சென்றடைந்து மீண்டும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தளத்திற்கு வந்து சேரும்.

    படகுகளின் இயக்கம் துவக்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ரூ.20 கோடி மதிப்பில் விவேகா னந்தர் பாறை பயணியர் படகு தளம் 100 மீட்டர் அளவில் விரிவு படுத்தும் பணியினையும், ரூ.37 கோடி மதிப்பில் திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் பாறை வரை சுற்றுலா பயணிகள் செல்வதற்கு கண்ணாடி இழை இணைப்பு பாலம் அமைக்கும் பணியையும் அமைச்சர் வேலு துவக்கி வைத்தார்.

   நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், உதவி ஆட்சியர் (பயிற்சி) குணால் யாதவ், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) கணேசன், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக துணை பொது மேலாளர் (இயக் கம்) தியாகராஜன், மேலாளர் செல்லப்பா, துணை மேலாளர்கள் பழனி, ராஜசேகரன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.