புதுக்கோட்டை, பிப்.14- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நிலுவையில் உள்ள சம்பளப் பாக்கிகளை உடனடியாக வழங்க வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கந்தர்வகோட்டையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் கே.சித்திரவேல் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஆர். ராஜலிங்கம், எல். அண்ணாத்துரை, கே. சக்திவடிவேல், ஏ.மாயாவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாநிலத் தலைவரும், கந்தர்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்னதுரை உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.சலோமி, விவசாயிகள் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் த. அன்பழகன், விதொச நிர்வாகி வி. ரெத்தினவேல், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஜி. பன்னீர்செல்வம், சிஐடியு மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகள் பேசினர். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நிலுவையில் உள்ள சம்பளப் பாக்கிகளை உடனடியாக வழங்க வேண்டும். வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வேலை அட்டை வழங்க வேண்டும். சட்டக்கூலி ரூ.319-ஐ முழுமையாக வழங்க வேண்டும். பணித்தளப் பொறுப்பாளர்களை சுழற்சி முறையில் அமைத்திட வேண்டும். ஒன்றிய அரசு இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். ஆண்டுக்கு 200 நாள் வேலையும், ரூ.600 கூலியும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் பங்கேற்றனர். கும்பகோணம் கடந்த மூன்று மாதமாக நூறு நாள் வேலை செய்த தொழிலாளர்களுக்கு ஊதியத்தை ஒன்றிய அரசு உடனடியாக வழங்கிட வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் சார்பில் நாச்சியார்கோவில் ஐஓபி வங்கி முன்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிவேல் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி விவசாயத் தொழிலாளர் சங்க தஞ்சை மாவட்டச் செயலாளர் வாசு பேசினார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள், விவசாயத் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.