திருச்சிராப்பள்ளி, ஜூன் 16- காவேரி குழும மருத்துவமனைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள 200 படுக்கைகள் கொண்ட அதி நவீன மருத்துவமனையான ‘மா காவேரி’ திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது.
விழாவில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு, மருத்துவமனையை திறந்து வைத்தார். விழாவில் மாநகராட்சி மேயர் அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
விழாவிற்கு காவேரி குழும மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர் டாக்டர் எஸ்.சந்திரகுமார், காவேரி குழும மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ். மணிவண்ணன். காவேரி குழும மருத்துவ மனைகளின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநரும், தலைமை குழந்தைகள் நல மருத்துவருமான டாக்டர் டி.செங்குட்டுவன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
திருச்சியின் மையப் பகுதியில் அமைந்துள்ள ‘மா காவேரி’ இப்பகுதியில் மிகவும் மரியாதைக்குரிய மற்றும் நம்பகமான சேவையை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டும், இந்த புதிய வசதி, குழந்தை மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவப் பராமரிப்பில் புதிய தரநிலைகளை அமைக்கவும் உறுதியளிக்கிறது.
குழந்தைகளுக்கான அனைத்து சிறப்பு மருத்துவம் மற்றும் தீவிர சிகிச்சை ஆகியவற்றில் முதன்மையான கவனம் செலுத்தி, பல்வேறு சூப்பர் ஸ்பெஷாலிட்டி சேவைகளை வழங்க இருக்கிறது.
இதுகுறித்து மா காவேரி மருத்துவமனை இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநரும், தலைமை குழந்தைகள் நல மருத்துவருமான டாக்டர் டி.செங்குட்டுவன் கூறுகையில், “மா காவேரி மூலம் திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள குடும்பங்கள் உயர்தர குழந்தை நல சிகிச்சைக்காக வேறு நகரங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
எங்கள் மருத்துவமனை விரிவான சிகிச்சை வசதிகளை அளிக்கிறது. உங்கள் வீட்டிற்கு அருகிலேயே எங்கள் குழந்தை நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சேவையை உறுதி செய்கிறது” என்றார்.
காவேரி குழும மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ்.மணிவண்ணன் கூறுகையில், “பெண்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மா காவேரி மூலம், பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் விரிவான சிகிச்சையைப் பெறும் புகலிடத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
அதிக ஆபத்துள்ள கர்ப்பங்கள் முதல் மேம்பட்ட மகளிர் மருத்துவ அறுவை சிகிச்சைகள் வரை, உயர்தர மருத்துவ பராமரிப்புடன் பெண்களுக்கு ஆதரவளிப்பதே எங்கள் குறிக்கோள் ஆகும்” என்றார்.