தஞ்சாவூர், ஏப்.16 - தஞ்சாவூர் அருகே 18 கிராமத்தினர் இணைந்து, ஒரே இடத்தில் பொன்னேர் பூட்டி, விவசாயம் செழிக்க வேண்டி வழிபட்டனர்.
“சித்திரை மாச புழுதி பத்தரை மாற்று தங்கம், சித்திரையில மழை பெய்ஞ்சா பொன்னேர் கட்டலாம்னு” கிராமங்களில் சொலவடை உள்ளது. இத்தகைய பாரம்பரிய பொன்னேர் பூட்டுதலை, ஆண்டுதோறும் சித்திரை மாதங்களில் டெல்டாவில் மிகப்பெரிய விழாவாக விவசாயிகள் கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் வீரமரசன்பேட்டையில் சனிக்கிழமை பொன்னேர் பூட்டும் திருவிழாவுக்காக 18 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஒன்று திரண்டு தங்களின் குலதெய்வமான, பூதலூர் நாச்சியாரம்மன் கோவிலில், விதை நெல், ஏர் கலப்பை, மாட்டு வண்டி, நவ தானியங்களை வைத்து வழிபட்டனர்.
பின்னர் அங்கிருந்து மாட்டு வண்டியில் ஊர்வலமாக வீரமரசன்பேட்டை கிராம எல்லையில், இந்திரன் கோட்டம் வயலுக்கு சென்று பூஜை நடத்தினர். பின்னர் ஏர் கலப்பையில், மாடுகளை பூட்டி வயலை உழுது விதை நெல்லை தூவி இயற்கையை வழிபட்டனர்.