districts

img

உலகளவில் புகழ்பெற்ற ஆத்தங்குடி டைல்ஸ் கற்களுக்கு புவிசார் குறியீடு கேட்டு பதிவு

தஞ்சாவூர், ஏப்.16 -  ஆத்தங்குடி டைல்ஸ் கற்களுக்கு புவிசார் குறியீடு கேட்டு பதிவு செய்துள்ளதாக, சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், அறிவுசார் சொத்துரிமைக் கழக வழக்கறிஞருமான சஞ்சய்காந்தி தெரிவித்தார். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:   “கலைநயம் மிக்க வேலைப்பாடுகளுடன் கூடிய ஆத்தங்குடி தரைக்கற்கள் (டைல்ஸ்) இன்றளவும், செட்டிநாடு வீடுகளிலும், அரண்மனைகளிலும் அழகு சேர்த்து வருகிறது. ஆத்தங்குடி கிராமத்தில், குடிசைத் தொழிலாக 50-க்கும் மேற்பட்ட தயாரிப்பு கூடங்களில் இந்த டைல்ஸ் கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இயந்திரங்களை பயன்படுத்தாமல், இயற்கையான முறையில், கை வேலைப்பாடுகளுடன் இவை உருவாக்கப்படுகின்றன. குளிர்காலத்திலும், கோடைகாலத்திலும் அந்தந்த கால வெப்பநிலைக்கு ஏற்ப இந்த தரைக்கற்களின் செயல்பாடுகள் உள்ளன. மேலும், கலை வேலைப்பாடு, நீண்ட காலம் உழைக்கும் திறன், நிறம் மாறாத சாயப் பயன்பாடு, விலை குறைவு என்பது தனிச் சிறப்பு. நவீன தரைக்கற்கள் போல் அல்லாமல், 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்தக் கற்கள் பதித்த தரையில் நடக்கின்ற போதும், அவர்களுக்கு எந்தவித உடல் பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும். ஆத்தங்குடி டைல்ஸ், இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ் போன்ற பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த பகுதியில் கிடைக்கும் வாரிமண், சிமெண்ட் ஆகியவற்றை கொண்டு செய்வதாலும், பாரம்பரியமிக்க கைவினைக் கலைஞர்கள் பலநூறு ஆண்டுகளாக செய்வதால், இந்த வடிவமைப்பை வேறு ஊர்களில் செய்ய முடியாது.   “செட்டிநாடு தரைக்கற்கள்”, “பூ தரைக்கற்கள்”, “கண்ணாடி தரைக்கற்கள்” காரைக்குடி தரைக்கற்கள் என 200-க்கும் மேற்பட்ட பூ டிசைன்களில் தயாரிக்கப்படுகிறது. இவை, உலக அரங்கில் அழிக்க முடியாத அடையாளச் சின்னங்களாக உள்ளன. 500 வருடத்திற்கு முன்பே இந்த கற்கள் தயாரிப்பு பணி துவங்கியதாக பல வரலாற்று செய்திகள் கூறுகின்றன.  இதை கருத்தில் கொண்டு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலுக்கான தொழில்நுட்பம் மேம்பாடு மையம், செயல்முறை மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு மையம், ஆத்தங்குடி ஹெரிடேஜ் தரைக்கற்கள் உற்பத்தியாளர் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் புவிசார் குறியீடு கேட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது”. இவ்வாறு அவர் கூறினார்.