districts

திருச்சி - சென்னை சோழன் ரயிலுக்கு இணைப்பு ரயில் விடக் கோரிக்கை

தஞ்சாவூர், ஏப்.17 - திருச்சி - சென்னை பகல் நேர சோழன் விரைவு ரயிலில் செல்வதற்கு வசதியாக காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறைக்கு இணைப்பு ரயில் விட வேண்டும் என பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  இதுகுறித்து சங்கத்தின் செயலாளர் ஜி.மூர்த்தி தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:  காரைக்குடி -  பட்டுக்கோட்டை - திருவாரூர் மார்க்கமாக அகலப்பாதை பணிகள் முடிவடைந்தும் இதுவரை விரைவு ரயில்கள் இயக்கப்படவில்லை. முழுநேர கேட்கீப்பர்கள் இல்லை என சுட்டிக் காட்டப்பட்டது. தற்போது பகல் நேர கேட்கீப்பர்கள் தான் உள்ளனர். இரவுநேர கேட் கீப்பர்கள் பணியில் இல்லை என ரயில்வே அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.  இதனால் இந்த மார்க்கத்தில் ரயில்கள் இயக்கப்படுவது தாமதமாகி வருகிறது. இந்நிலையில் இத்தடத்தில் பகல் நேர கேட் கீப்பர்கள் இருப்பதால், திருச்சி-சென்னை பகல் நேர அதிவிரைவு சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில், மயிலாடுதுறையில் இருந்து சென்னை செல்வதற்கு வசதியாக, காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறைக்கு, அறந்தாங்கி- பட்டுக்கோட்டை - திருவாரூர் மார்க்கமாக, உடனடியாக இணைப்பு விரைவு ரயில் ஒன்று இயக்கப்பட வேண்டும்.  சமீப நாட்களாக ரத்து செய்யப்பட்ட விரைவு ரயில்கள் பல மீண்டும் இயக்கப்படுவதும், டபுள் டக்கர் இயக்கப்படுவதும், சிறப்பு ரயில் இயக்கப்படுவதும் என ரயில்வே அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 120 ஆண்டுகள் பாரம்பரியமிக்க காரைக்குடி- மயிலாடுதுறை வழித்தடம் தெற்கு ரயில்வே அதிகாரிகளால் பல காரணங்களை கூறி புறக்கணிக்கப்பட்டு வருவது இப்பகுதி மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.  எனவே, சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இணைப்பு ரயிலாக காரைக்குடி - மயிலாடுதுறை இணைப்பு ரயில் பட்டுக்கோட்டை வழியாக இயக்குவதற்கு திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.