தஞ்சாவூர், ஜூன் 29- இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் திராவிட மொழிக் குடும்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என பன்னாட்டு திராவிட மொழியியலாளர் பள்ளித் தலைவரும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான கி.கருணாகரன் கூறினார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், இந்திய திராவிட மொழியியல் சங்கம், பன்னாட்டுத் திராவிட மொழியியலாளர் பள்ளி, இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் ஆகியவை சார்பில் வியாழக்கிழமை தொடங்கிய 51 ஆவது அகில இந்திய திராவிட மொழியியலாளர் மாநாட்டில் அவர் மேலும் பேசியதாவது:
திராவிடம் ஒரு மொழிக் குடும்பம் என்பது கடந்த 3 நூற்றாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனுடைய உண்மைத் தன்மைகள் திராவிட மொழியியல் மாநாடு, கருத்தரங்கம் மூலம் முன்வைக்கப்படுகின்றன. திராவிட இனம், திராவிட மொழிகள், திராவிட பண்பாடு போன்றவற்றில் எதுவும் உண்மைக்கு மாறானது அல்ல. இவை அனைத்தும் நிரூபிக்கப்பட்டவை.
இதற்கு கால்டுவெல் அடித்தளமாக இருந்தாலும், அவருக்கு முன்பே எல்லீஸ் போன்றவர்கள் ஆய்வு செய்துள்ளனர். இங்கு மட்டுமல்லாமல், உலக அளவிலும் திராவிடம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. உலகிலுள்ள மொழிக் குடும்பங்களில் திராவிடமும் ஒன்று என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
திராவிடம் மட்டுமல்லாமல் ஐரோப்பிய, ஆசிய உள்பட எத்தனையோ மொழிக் குடும்பங்கள் உள்ளன. இதைப் பல்கலைக்கழகங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. மேலும், தமிழ்ப் பல்கலைக்கழகம், திராவிட மொழிப் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய மொழியியல் சங்கத் தலைவரும் (புனே), பேராசிரியருமான எம்.ஜே.வார்சி பேசுகையில், “யு.பி.எஸ்.சி. தேர்வில் மொழியியலை விருப்ப பாடமாகச் சேர்ப்பதற்காகத் தேர்வாணையம் சில தரவுகளைக் கேட்டுள்ளது. இதற்காக தரவுகள் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நம் நாட்டில் இதுவரை 55 பல்கலைக்கழகங்களில் மொழியியல் முதுநிலைப் பட்டப்படிப்புகளும், 39 பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டமும், 15 பல்கலைக்கழகங்களில் மொழியியல் இளநிலைப் பட்டப்படிப்புகளும் வழங்கப்படுகின்றன” என்றார்.
இந்த தொடக்க விழாவுக்கு தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.செல்வம் சிறப்புரையாற்றினார். தமிழ்ப் பல்கலைக்கழக தமிழ் அறிஞர் இராபர்ட் கால்டுவெல் இருக்கை தகைசால் பேராசிரியர் ந. நடராசப்பிள்ளை அறிமுகவுரையாற்றினார்.
அனந்தபூர் ஸ்ரீகிருஷ்ணதேவராயா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.சுகுமாரி, பன்னாட்டுத் திராவிட மொழியியலாளர் பள்ளி இயக்குநர் ஜி.கே. பணிக்கர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன துணை இயக்குநர் பி.ஆர்.டி. பெர்னாண்டஸ் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
முன்னதாக, தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) சி.தியாகராஜன் வரவேற்றார். மொழிப்புலத் தலைவர் ச.கவிதா நன்றி கூறினார். இந்த மாநாடு சனிக்கிழமை நிறைவடைகிறது.