districts

img

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்: மாணவர் சங்க தலைவரை கைது செய்த காவல்துறை- மாணவர் சங்கம் கண்டனம்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற சென்ற மாணவர் சங்க மாநிலத்தலைவரை காவல்துறையினர் கைது செய்ததற்கு மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 13- ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்.

இந்த விழாவில், கருப்பு உடையணிந்து வந்த இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 13- ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 

விழாவுக்கு வந்தவர்களை வரவேற்று, ஆண்டறிக்கையை பல்கலைக் கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் வாசித்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னாள் காவல் அதிகாரிகள் கு.பெரியய்யா, அ.கலியமூர்த்தி உள்பட 302 பேருக்கு, முனைவர் பட்டங்களை வழங்கி உறுதிமொழியினை வாசித்தார். அதனைத் தொடர்ந்து 490 எம்.பில் மாணவர்கள், 119 முதுகலை மாணவர்கள், 2 இளங்கலை மாணவர்கள், 257 பி.எட், மாணவர்கள், தொலைநிலைக் கல்வியில் பயின்ற 9,670 பேர் என மொத்தம் 10 ஆயிரத்து 840 பேருக்கு பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது

வெளியேற்றம்:
முன்னதாக தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்கு வரும் ஆளுநருக்கு எதிராக சிபிஐ, சிபிஎம் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.
இதையடுத்து தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

அப்போது விழா அரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான, இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.அரவிந்தசாமி, தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் படித்து எம்.பில் பட்டம் பெற வந்திருந்தார். அவர் வெள்ளை நிற அங்கி அணிந்திருந்தார். 

அப்போது அங்கு வந்த புலனாய்த்துறை மற்றும் தனிப்பிரிவு, க்யூ பிரிவு காவல்துறையினர் அரவிந்த்சாமியை அரங்குக்கு வெளியே அழைத்துச் சென்று அவரிடம் விசாரித்தனர். மேலும் அவர் கருப்பு சட்டை அணிந்திருந்ததால், அவரிடம் மேலும் விசாரணை நடத்தினர். 

பின்னர் தனி அறைக்கு அழைத்துச் சென்று அவரிடம் கருப்புக் கொடி உள்ளிட்ட ஏதாவது பொருட்கள் இருக்கிறதா என சோதனை நடத்தினர். 

சுமார் 30 நிமிடங்கள் அவரை சோதனை நடத்திய பின்னர் மீண்டும் விழா அரங்குக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து ஆளுநர் விழா அரங்கத்துக்குள் வந்ததும் அவரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அரங்கத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்ற காவல்துறையினர் தங்களது பாதுகாப்பில் அவரை வைத்துக் கொண்டனர்.

அதே போல் முனைவர் பட்டம் பெற வந்த தமிழ்நாடு மாணவர் கூட்டியக்கத்தின் மாவட்டத் தலைவர் ஜான்வின்சென்ட் என்பவரையும் காவல்துறையினர் பட்டம் பெறுவதற்கு முன்பாக அவரையும் வலுக்கட்டாயமாக அரங்கத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து தமிழ்நாட்டு ஆளுநர் ஆன்.என்.ரவி தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு புறப்பட்டு சென்ற பின்னர் பல்கலைக் கழக துணைவேந்தர் திருவள்ளுவன் அரவிந்தசாமி மற்றும் ஜான்வின்சென்ட் ஆகியோருக்கு பட்டங்களை வழங்கினார்.

சிபிஎம் போராட்டம் 

இந்நிலையில், இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் அரவிந்த்தசாமியை பட்டமளிப்பு அரங்கத்தில் இருந்து வெளியேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவருக்கு உடனடியாக பட்டம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டனர். 

மனித உரிமை மீறல் 

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன் கூறுகையில், கவர்னர் பாதுகாப்புக்காக வந்திருந்த காவல்துறையினர் அத்துமீறி நடந்துள்ளனர். இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் அரவிந்த்சாமியை நாள் முழுக்க எலக்ட்ரிக் கோடவுன் அறையில் அடைத்து வைத்து, அவருடைய ஆடைகளை களைந்து அரை நிர்வாண நிலையில் சோதனை நடத்தியுள்ளனர். இதில் மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது. பட்டம் பெற வந்த மாணவரை பட்டமளிப்பு விழா அரங்கில் இருந்து வெளியேற்றி, மாணவராக அவருக்குள்ள உரிமையை பறித்துள்ளனர். தன்னுடைய மாணவரின் உரிமையை பாதுகாக்க தமிழ் பல்கலைக்கழக நிர்வாகம் தவறிவிட்டது இதில் சம்பந்தப்பட்ட மாநில காவல் துறையும் கவர்னரின் பாதுகாப்புக்காக வந்திருந்த காவல்துறை அதிகாரிகள் மீதும் அரசு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். 

தோழர் என்றாலே அலர்ஜி 

மாணவர் சங்க மாநிலத் தலைவர் காவல்துறையினரால் விடுவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பட்டமளிப்பு விழா அரங்கில் அமர வைக்கப்பட்டிருந்த என்னை காலை 9 20 மணிக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரித்து திரும்ப அமர வைத்தனர். சற்று நேரத்தில் காவல் துறையின் வேறொரு பிரிவு அதிகாரிகள் வந்து என்னை தனியே அழைத்துச் சென்று மின் இணைப்புகள் உள்ள ஒரு குடோன் போன்ற அறையில் தங்க வைத்தனர். காலை முதல் மாலை 3 மணி வரை என்னை விடுவிக்கவில்லை. அதன் பின்னர் பட்டமளிப்பு சான்றிதழ் காணவில்லை என தெரிவித்தனர். பின்னர் போராடி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரிடம் சென்று என்னுடைய பட்டத்தை பெரும் நிலை ஏற்பட்டது. மாணவர் என்ற முறையில் என்னுடைய உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் மாணவர் சங்கத்தில் மாநில தலைவராக இருக்கிறேன் என்ற காரணத்தினாலேயே என்னை அவமரியாதை செய்துள்ளனர். அந்த அரங்கில் என்னை கண்ட மாணவர்கள் தோழரே நலமா என்று கேட்டதற்காக, தோழர் என்று சொன்ன அனைத்து மாணவர்களையும் அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் மனித உரிமை ஆணையம் தலையிட வேண்டும்" என்றார்.