districts

ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க செப்.30 கடைசி நாள்

தஞ்சாவூர், செப்.27  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆறு.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  மாநில அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியதாரர்கள், தபால்காரர்கள் மூலம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசுக்கும், இந்திய அஞ்சல்துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கும் இடையே, கடந்த 31.5.2022 அன்று கையெழுத்தாகி உள்ளது.  இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, 1 ஜூலை 2022 முதல் 21 செப்டம்பர் 2022 வரை, சுமார் 1,58,734 மாநில அரசு ஓய்வூதிய, குடும்ப ஓய்வூதியதாரர்கள் தபால்காரர்கள் மூலம் வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்துள்ளனர்.  இதுவரை தங்களது உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்காத ஓய்வூதியதாரர்கள் 30.9.2022-க்குள் (சமர்ப்பிக்க கடைசிநாள்) அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது தபால்காரரை தொடர்பு கொண்டு, வீட்டில் இருந்தபடியே சமர்ப்பிக்கலாம். கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக வருடாந்திர உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் இருந்து அரசு விலக்கு அளித்து இருந்தது. இந்த ஆண்டு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் வரும் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும்படி தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, ஜீவன்பிரமான் திட்டத்தின் மூலம், அஞ்சல்துறையின் கீழ் செயல்படும் “இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி”, ஓய்வூதியதாரர்களின் வீட்டு வாசலிலேயே, பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், மொபைல் எண், பி.பி.ஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல்ரேகை பதிவு செய்தால், ஒருசில நிமிடங்களில், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

;