தஞ்சாவூர், மார்ச் 26 - தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே ஜேசிபி இயந்திரத்தின் மீது தனியார் பேருந்து மோதியதில் 23 பேர் காயமடைந்தனர். திருவையாறு அருகே ராயம்பேட்டை முதன்மைச் சாலையில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை வீரமாங்குடியிலிருந்து தஞ்சாவூர் நோக்கி தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. இப்பேருந்து ராயம்பேட்டை முதன்மைச் சாலையில் வந்தபோது எதிர்பாராதவிதமாக ஜேசிபி இயந்திரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில், பேருந்தின் ஓட்டுநர் சிறுபுலியைச் சேர்ந்த பிரபாகரன் (32), நடத்துநர் அரியலூர் மாவட்டம், சேனாதிபதியைச் சேர்ந்த ஜீவானந்தம் (39), பேருந்தில் பயணம் செய்த ஈச்சங்குடியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (50), கோமதி (48), மாரியம்மாள் (55), மாரிமுத்து (60), சோமேஸ்வரத்தை சேர்ந்த ரமேஷ் (50), சிவகுமார் (24), செம்மங்குடி மடத்தைச் சேர்ந்த பிரகாஷ் (20), ஸ்ரீதேவி (22), திருப்பழனத்தைச் சேர்ந்த ரேவதி (57), வர்ஷா (21), வித்யா (30), சுதா (40), மகிழன்(15), வெங்கடாசலம் (60), சேனாதிபதியை சேர்ந்த செந்தாமரை (62), சம்பூர்ணம் (60), சங்கவி (55), கலியமூர்த்தி (67), லெட்சுமி (68), மனோஜிப்பட்டியை சேர்ந்த அபிநயா (23), கண்டியூரை சேர்ந்த அமலா (19) ஆகிய 23 பேர் காயமடைந்தனர். அனைவரும் திருவையாறு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். இவர்களில் அபிநயா, பிரபாகரன், வெங்கடாசலம், மகிழன், மாரிமுத்து, வித்யா, கலியமூர்த்தி, சுதா உள்பட ஒன்பது பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.