districts

தீக்கதிர் செய்தி எதிரொலி பழுதடைந்த பள்ளிக் கட்டிடம் இடித்து அகற்றம்

தஞ்சாவூர், அக்.11 - தீக்கதிர் செய்தி எதிரொலியாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் நடவடிக்கைகள் காரணமாகவும் செய்யாமங்கலத்தில் பழுதடைந்த பள்ளிக் கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.  தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே, செய்யாமங்கலத்தில் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளி உள்ளது. இதன் அருகே பழுதடைந்த பள்ளிக் கட்டடம் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தது. சுற்றிலும் நான்கு பக்கமும் குடியிருப்புகள் உள்ளன. எனவே பயன்பாட்டில் இல்லாத இந்த பழைய கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் எம்.ரமேஷ் கோரிக்கை விடுத்தார்.  இந்நிலையில், இதுகுறித்து கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது. இதன் தொடர்ச்சியாக அந்த இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் பழுதடைந்த பள்ளிக் கட்டிடம் பாதுகாப்பான முறையில் இடித்த அகற்றப்பட்டது. இதனால், இப்பகுதி பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இருந்த அச்சுறுத்தல் நீங்கியது.  இதுகுறித்து செய்தி வெளியிட்ட தீக்கதிர் நாளிதழுக்கும், நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

;