districts

கோட்டப் பொறியாளர்களை கண்டித்து சாலை ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜூன் 16-  தமிழ்நாடு சாலை ஆய்வாளர் சங்கத்தின் சார்பில், உதவிக் கோட்டப் பொறியாளர்களின் ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து ஜூன்  25 ஆம் தேதி மாலைநேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று சங்க கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு சாலை ஆய்வாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம், தஞ்சாவூரில் மாவட்டத் தலைவர் முருகானந்தம் தலைமை யில் நடைபெற்றது. திருச்சி மண்டல பிரதிநிதி கண்ணன் வேலை அறிக்கை வாசித்தார். அனைத்து உட்கோட்டங்களிலும் இருந்து பங்கேற்ற சாலை ஆய்வாளர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். 

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு  அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ரெங்கசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செய லாளர் கோதண்டபாணி சிறப்புரை ஆற்றினார்.

தஞ்சை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட அலகில் காலியாக உள்ள திறன்மிகு உதவியாளர் நிலை பணியிடத்தை, திறன்மிகு உதவியாளர் நிலை - 2 இல் முதுநிலை வரிசைப்படி நிலை 1 இல் வழங்க வேண்டும். தஞ்சாவூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட அலகில் உள்ள திறன் மிகு உதவியாளர் காலிப் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும். ஊழியர் விரோதப் போக்கை கடைப்பிடித்து வரும் திருவிடைமருதூர் உதவி  கோட்டப் பொறியாளர் மற்றும் இளநிலைப் பொறியாளர், பட்டுக்கோட்டை உதவி கோட்டப் பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் ஆகியோர் மீது உரிய விசாரணை மேற்கொண்டு  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன்  25 அன்று தஞ்சாவூர் கோட்ட பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) அலுவலகம் முன்பு மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்  நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.