districts

வலைகளை சேதப்படுத்தியதாக புகார் வெளிமாவட்ட விசைப்படகுகள் பறிமுதல்

சேதுபாவாசத்திரம், ஜன.8 -  தஞ்சாவூர் மாவட்ட கடல் பகுதியில், 5 நாட்டிக்கல் கடல் பகுதிக்குள் மீன் பிடிக்கக் கூடாது என்ற விதியை மீறி, வெளி மாவட்ட விசைப்படகுகள் மீன் பிடிப்பதாகவும், இந்த படகுகளால், நாட்டுப்படகு மீனவர்களின் வலைகள் சேதமடைவதாகவும், நாட்டுப்படகு மீனவர்கள் தரப்பில் தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சனிக்கிழமை மாலை சேதுபாவாசத்திரம் மீன்பிடி இறங்கு தளத்திலிருந்து மீன் துறை ஆய்வாளர் வி.துரைராஜ், சார் ஆய்வாளர் என்.ஆனந்த் தலைமையிலான அதிகாரிகள் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, முத்துப்பேட்டை வாய்க்காலுக்கும் செல்லக்கண்ணி ஆற்று வாய்க்காலுக்கும் இடைப்பட்ட பகுதியில், மூன்றரை நாட்டிக்கல் கடல் தூரத்தில், இரண்டு விசைப்படகுகள் மீன் பிடித்தது உறுதி செய்யப்பட்டது.  இதையடுத்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து, தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது.