தஞ்சாவூர், பிப்.6- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, ரயில்நிலையத்தில், 30 ஆண்டுகளுக்கு பிறகு சரக்கு முனையம் திறக்கப்பட்டு, நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் அரவைக்காக, நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன. திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி வழித்தடத்தில், அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் 2012-ஆம் ஆண்டு துவங்கி 2019 ஆம் ஆண்டு நிறைவடைந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், ரயில்நிலையத்தில், சரக்குப் போக்குவரத்து முனையம் அமைக்க, நிலம் கையகப்படுத்தப்பட்டது. பின்னர், 2019 இல் ரூ.8 கோடி மதிப்பீட்டில், சரக்கு முனைய அலுவலகம், லாரிகள் வந்து செல்ல அணுகு சாலைகள், சிமெண்ட் தளம், உயர் மின் விளக்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், திங்கள்கிழமை காலை, லாரி உரிமையாளர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சார்பில், பூஜைகள் நடத்தப்பட்டு நெல் மூட்டைகள் ரயிலில் ஏற்றப்பட்டன. நிகழ்ச்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தஞ்சாவூர் முதுநிலை மண்டல மேலாளர் என்.உமா மகேஸ்வரி, ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் பி. பெத்துராஜ், பட்டுக்கோட்டை ரயில் நிலைய அதிகாரி மருத பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.