தஞ்சாவூர், டிச.11- தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு புறவழிச்சாலை திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் மீண்டும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். திருவையாறு புறவழிச்சாலை திட்டத்துக்காக விவசாயிகளின் வயல்கள் கையகப்படுத்தப்பட்டு, சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், இச்சாலை வயல்கள் வழியாக அமைக்கப்படுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில், சம்பா சாகுபடி செய்யப்பட்டு வரும் வயல்களின் நெற்பயிர்களில் மண்ணைக் கொட்டி சாலை அமைக்கும் பணி டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஒரு மாதத்தில் அறுவடை செய்யப்படும் தருவாயில் உள்ள பயிர்களில் மண் கொட்டப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, அப்பகுதியில் சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்தப் புறவழிச்சாலை பிரச்சனை தொடர்பாக தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தைக் கூட்டம் டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, புறவழிச்சாலை உறுதியாக அமைக்கப்படும் என்றும், சம்பா பயிர்கள் அறுவடை செய்யப்படும் வரை கால அவகாசம் வழங்கப்படும் எனவும் கோட்டாட்சியர் எம்.ரஞ்சித் அறிவித்தார்.இதில் சமரசம் ஏற்படாததால், மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்தனர். இதன்படி, விவசாயிகள் புறவழிச்சாலையைக் கைவிட வலியுறுத்தியும், மாற்று வழியில் புறவழிச்சாலையை அமைக்கக் கோரியும் சனிக்கிழமை கண்டியூரில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.