districts

img

மது குடித்து 2 பேர் மரணம்- மதுவில் சயனைடு: கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

தஞ்சை மாவட்டம் கீழஅலங்கம் பகுதியில் சட்டவிரோதமாக விற்ற மதுவை வாங்கி குடித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில், மதுபானத்தில் சயனைடு கலந்தது உடல்கூறு ஆய்வில் தெரியவந்ததால், இது கொலையா? அல்லது தற்கொலைக்கு முயன்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கீழ அலங்கம் பகுதியில் அரசு அனுமதி பெற்ற மதுபானக் கடை உள்ளது. அதற்கு எதிரே உள்ள பாரில் மதுபான கடை திறக்கப்படும் நேரத்திற்கு முன்பே சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி மற்றும் விவேக் ஆகிய இருவர் மதுபான கடைக்கு எதிரே உள்ள பாரில் சட்டவிரோதமாக மதுபானம் வாங்கி குடித்துள்ளனர்.அப்போது இருவருக்கும் வாயில் நுரை தள்ளி வலிப்பு ஏற்பட்தையடுத்து, அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குப்புசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த விவேக்கும் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட பாருக்கு சீல் வைக்கப்பட்டு, பார் உரிமையாளர் மீது வழக்கு பதியப்பட்டது. மேலும், பாரில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பட்டு இருந்த நிலையில், மது மாதிரியில் சயனைடு கலந்திருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, மதுவில் சயனைடு கலக்கப்பட்டது திட்டமிட்ட கொலையா?  அல்லது தற்கொலைக்கு முயன்றார்களா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.