districts

img

இந்தியா உடனான தொழில்நுட்பத்தை பரிமாற்றிக்கொள்ள தயார்: சேலம் கருத்தரங்கில் கியூபா துணை தூதர் பேச்சு

இந்தியா உடனான தொழில்நுட்பத்தை பரிமாற்றிக்கொள்ள கியூபா தயாராக உள்ளது என என சேலத்தில் நடைபெற்ற வேளாண்மை துறை சர்வதேச கருத்தரங்கில் அந்நாட்டின் துணை தூதர் ஆபேல் டெஸ்பெய்ஜின் தெரிவித்தார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை துறை சார்பாக 5 ஆவது சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பேசுகையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொழில் முனைவோரை உருவாக்குவதற்கான அனைத்து வசதி வாய்ப்புகளையும் வேளாண்மை துறை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது, என்றார். இக்கருத்தரங்கின் மூலமாக வெளியிடப்படும் அனைத்து ஆய்வு கட்டுரைகளின் சிறப்புகள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். தமிழக அரசாங்கம் தொழில் முனைவோர்களுக்கு வழங்கி வரும் சலுகைகள், கடன் உதவிகள் பற்றிய விழிப்புணர்வு சிந்தனைகள் குறித்தும் விளக்கமாக தெரிவித்தார்.

இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கியூபா நாட்டின் துணை தூதர் ஆபேல் டெஸ்பெய்ஜின் கலந்து கொண்டு, கியூபா நாட்டின் தொழில் அனுபவத்தையும், தொழிலின் முக்கியத்துவத்தை பற்றியும் எடுத்துக் கூறினார். மேலும், இந்தியாவிற்கும், கியூபா நாட்டிற்கும் உள்ள நட்புணர்வையும், இதன் மூலம் நடைபெற்றுக் கொண்டுள்ள ஏற்றுமதி தொழிலில் முக்கியத்துவத்தை பற்றியும் தெளிவாக கூறினார். கியூபா இந்தியாவோடனான தொழில்நுட்பத்தை பரிமாற்றிக் கொள்வதற்கும், ஆராய்ச்சி சம்பந்தமான தகவல்களை மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்களிடம் பரிமாற்றிக் கொள்வதற்கும் தயாராக உள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் உள்ள பொருளாதாரக் கல்லூரியின் இணைப்பேராசிரியர் தமிழரசு, கிருத்திகா பைப்ஸ் மேலாண்மை இயக்குனர் ராஜேஸ்வரன் சேலம் பெரியார் பல்கலைக்கழக மேலாண்மை துறையின் இணை பேராசிரியர் யோகானந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;